Sunday, October 30, 2011

அன்றொருநாள்...............

*****
அன்றொருநாள் ;

பசுமையான மலரும் நினைவுகள் ;

'' கண்ணில் தூசு விழுந்துவிட்டது,

கொஞ்சம் ஊதி எடுங்கள் '' என்கிறாய்.

நல்ல உதவி.............நான் மறுப்பேனா ?

'' நீங்கள் ஊதுகிறீர்களா ? உறிஞ்சுகிறீர்களா ?

இது உதடு அல்ல கண் '' என்கிறாய்.

நான் சிரித்துக்கொண்டே,எனக்கு இப்படியெல்லாம்

வித்தியாசம் பார்க்கத் தெரியாது என்கிறேன்.

'' உங்கள் உதட்டில் தூசு ஒட்டிக்

கொண்டிருக்கிறதே '' என்று தொடர்கிறாய்.

'' அதை விட்டுவிடு, அது என்னுள்ளே போகட்டும்,

உன் கண்ணின் செய்தியைத் தூதாக

இருந்து சொல்லட்டும்'' என்கிறேன்.....

மறந்தேனும் தொலைத்துவிடாதே !...............

**************************

உன் நாணத்தின் திரைச்சீலையை
சீர்செய்து என் எண்ணங்களைப் பரிமாறத் திரும்பினால் ,

உன் விழியோரப் பார்வையில் என் மோகத்தின்
சிறகுகள் முளைத்து எழுகின்றன !

நமக்கான சில்மிசச் சிந்தனையின் சன்னலைச் சாத்துகையில் ,
உனது ஏக்கத்தின் முந்தானை சரிந்து விழுவதைக் கண்டேன் !

ஓரமாக நெளியும் உன் இதழ்களில் நான் சொல்ல வந்த
எண்ணங்களும் தடம் மாறி விழுகின்றன !

தலையணைக்குள் ஒளித்துவைத்த உன் புன்னகைகள் எங்கே !

மறந்தேனும் தொலைத்துவிடாதே !

காரணம் ;

கொடியில் காய்ந்துகொண்டிருக்கும்
என் ஆடையில் தான் ஒட்டிக் கொண்டு
கிடக்குது உன் மல்லிகை இதழ்களின் வேட்கை !..........

''வேண்டாம்..............வேண்டாம்.....................''



*************************************************
''வேண்டாம்..............வேண்டாம்.....................''
*************************************************
உன்னை நேரில் கண்டபோது
இனிமேல் தான் என் வாழ்க்கைக்கு
ஓர் அர்த்தம் வரப்போகிறதென மகிழ்ந்தேன்.

''போய்வருகிறேன்'' என்று கூறிய
ஒரு வார்த்தையிலேயே அன்றே
நான் நடமாடும் பிணமாகிவிட்டேன்.

குறைந்தளவு நீ இந்த வார்த்தையாவது கொடு.

என்னைக் கைப்பிடிக்க வேண்டாம்.
நேசித்தாலே போதும்.

விரும்ப வேண்டாம்,
வேண்டவே வேண்டாம்;
அன்பு காட்டினாலே போதும்.

அன்பு காட்டாவிட்டாலும் பரவாயில்லை.
வெறுக்காமல் இருந்தால் போதும்.

குறைந்தளவு இந்த வரத்தையாவது கொடு.

என் கற்பனைகளையும் கனவுகளையும்
ஒன்றுக்கும் உதவாத காகிதத்
துண்டுகளைப் போல்
கிழித்தெறிந்துவிடாதே.

ஒருமுறை;
நம் தெருவோரத்தில் கூண்டுக்குள்
அடைபட்டுக் கிடந்த புறாக்களை
வானில் பறக்கவிட்டு மகிழ்கிறாய்.

மீனவன் ஒருவன் பிடித்துவந்த இரு
அழகிய மீன்களை விலைக்கு வாங்கித்
தடாகத்தில் அவற்றைத் துள்ள விடுகிறாய்.

என்றோ என் உள்ளுயிரை வாங்கி வைத்திருக்கும்
உன்னை இன்று வியந்து பார்க்கிறேன்.

''என்ன பார்க்கிறீர்கள்...உங்களுக்கும்''

''வேண்டாம்..............வேண்டாம்.....................''
என்னை மட்டும் விட்டுவிடாதே !
விடுதலை செய்துவிடாதே !
நான் உன்னைக் கெஞ்சுகிறேன்.......
வேண்டாம்.................

Saturday, October 29, 2011

அன்றொரு நாள் !

******
அன்றொரு நாள் !

ஒரு நள்ளிரவில் !

அந்த நந்தவனத்தில் இருக்கிறேன் !

ஊமை இருட்டின் மௌன அழகை

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன் ......,

என் ஏகாந்தத்தைக் கலைக்கும் வண்ணம் நீ ஓடி வருகிறாய்.....,

காரணம் புரியாத காரிருள் என் மேல் படிகிறது...........


'' இந்த நேரத்தில் இப்படி வரலாமா ? " என்கிறேன்.....,

" ஏன் பதறுகிறீர்கள் ? ஊர் வாய்க்குப் பயப்படுகிறீர்களா ! " என்கிறாய் !

" ஊர் வாய்க்கு மட்டுமல்ல நம்மையும் மீறி இந்த உடல்

பசி கொள்ளத் தொடங்கினால் என்ன செய்வது " என்கிறேன்......


" நீங்கள் உடலைப் பற்றியே நினைக்கிறீர்கள்.......,

நானோ என் ஆன்மாவை உங்கள் திருவடிகளில்

சமர்ப்பிக்க ஓடி வந்திருக்கிறேன் " என்கிறாய்......,

நீ என் பார்வையில் இமயமலையாய் உயர்ந்து நிற்கிறாய் !

என் குற்றமுள்ள நெஞ்சத்தின் சார்பாக நான் தலை குனிகிறேன்......

தொலைந்துபோகிறாள்.........


******************

நான் எழுதும் எழுத்துக்கள் அழகாக
இருக்கிறதெனப் பலர் கூறி என்ன பயன்.....
எனக்கென்று எழதப்பட்ட எழுத்துக்கள்
தலைகீழாக உள்ளதே.....

எல்லோருடனும் சகஜமாக
நகர்ந்து செல்லும் உன் சொற்கள்,
என்னை மட்டும் ஏனோ வேவு பார்க்கின்றன....
அளவோடு பேசிவந்த என்னை
அளவின்றிப் பேச வைக்கிறாய்.

என் உள் மனதின் உளறல்கள்
உயிர் தொலைத்த உணர்ச்சிகளாய்
வந்து விழுகின்றன என் காகிதத்தில்.
அந்த உணர்ச்சிகளைப் படித்த
உன் மௌன உதடு கூட
என் எழுத்துக்கள் சாதாரணமாகத் தான்
உள்ளதென கொக்கரிக்கின்றது.

உண்மைதான் , உன் கையெழுத்துக்கருகில்
என் வரிகள் சாதாரணமானவை தான்.
மேல் கிளையிலே நாகம்,
கீழே வேங்கை,
நடுக் கிளையிலே தொங்கிக்
கொண்டிருக்கிறது உனக்கான என் நம்பிக்கை.

வாசல் பெருக்கிச் சாணம் தெளிக்கும்
ஒரு குடும்ப மங்கையாக என்னுள்
புகுந்தவள் இன்று என்மீது கொண்ட
அவநம்பிக்கையில் கொஞ்சம் கொஞ்சமாகத்
தொலைந்துகொண்டிருக்கிறாள் அவளையே அறியாமல்.

என்னை விட்டுப் போகிறாயா ?....................

***********************
ஓர் அந்தியில் பழக்கமான
அந்தப் பசும்புல் தரையில்
அமர்ந்தவாறு நாம்
கண்களினாலே மொழியைக்
கௌரவப்படுத்திக் கொண்டிருக்கிறோம்....,
நீ அருகில் வருகிறாய் ,
உன் பக்கம் அமரத் துடிக்கிறேன்,
உன் இரு கரங்களையும் வாரி அணைக்கிறேன்....

அப்போது கதவை யாரோ தட்டும் ஒலி கேட்கிறது...,
என் கனவு கலைந்துவிடுமென்ற பயத்தில்
நான் கதவைத் திறக்கவில்லை....,
சில நேரத்தின் பின் அந்த
சத்தம் இல்லாமல் போகிறது......

யார் தான் என்று ஜன்னல் வழியாகப் பார்க்கிறேன்....,
தூரத்தில் போய்க்கொண்டிருக்கிறது ஒரு உருவம்,
அது உண்ணுருவமாக இருக்கக் கண்டு அதிர்ச்சியடைகிறேன்....

கனவில் வந்த நீ,
உன் கனவு கலைந்ததால்
போய்க்கொண்டிருக்கிறாயா.........,

அல்லது ;
நான் கனவில் மூழ்கியிருக்கிறேன் என்று
நனவில் வந்த நீ திரும்பிப் போகிறாயா,
கனவிலும் நிஜத்திலும் என்னை விட்டுப் போகிறாயா ?....................

பயணம்.....

******
நெற்றியில் ஆரம்பப் பயணம்,
தொடர்ந்து இமை வழியாக
இரு விழிகளும் தொட்டு,
கன்னத்தில் நாட்டியமாடி,
மேலுதட்டில் திலகமிட்டு,
கீழுதட்டில் முற்றுப்புள்ளி வைக்க மனமின்றி,
அங்கே இளைப்பாற அவளிடம் விண்ணப்பம் கேட்டேன்...............